ஜோகூர் பாரு: மலேசியாவின் ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மே 17) ஜோகூரில் பிரம்மாண்டாகத் தொடங்கியுள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராகிமின் கட்சியான கெஅடிலான், ஜனநாயகச் செயல் கட்சி(டிஏபி), அமானா ஆகியவற்றின் 5,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
காலை 7.30 மணியளவில் வருகைப் பதிவு நடைபெற்றது. சாபா, சரவாக்கிலிருந்தும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
‘மடானி உறுதிப்பாடு, மக்களின் நம்பிக்கை’ என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.
பக்கத்தான் தொடர்பாளர் ஃபாமி ஃபட்சில், டிஏபி, அமான உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உரை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடம்பெறும் என்றார்.
அவர்களுக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராகிம் முக்கிய உரையாற்றுவார் என்றார் அவர்.
பக்கத்தான் தலைவராகவும் உள்ள திரு அன்வார், வரப்போகும் ஜோகூர், மலாக்கா மாநிலத் தேர்தல்களை நோக்கிய கூட்டணியின் இலக்கு குறித்தும் 16வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

