கிரிக்கெட் ரசிகர்களை வீட்டிலேயே இருக்குமாறு பாகிஸ்தான் அறிவுறுத்து

கிரிக்கெட் ரசிகர்களை வீட்டிலேயே இருக்குமாறு பாகிஸ்தான் அறிவுறுத்து

2 mins read
எரிபொருள் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பு
1059c8d4-38aa-4a72-b2ee-ab07daa5c299
மார்ச் 26 முதல் மே 3 வரை நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், லாகூர் மற்றும் கராச்சியில் நடத்தப்படுகின்றன. - படம்: ஏஎஃப்பி

கராச்சி: மத்திய கிழக்கு போரினால் ஏற்படும் இடையூறுகள் தெற்காசிய நாடான பாகிஸ்தானின் பொருளியலைத் தொடர்ந்து பாதித்து வருவதால், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில், அதன் உயர்மட்ட கிரிக்கெட் போட்டியின் ரசிகர்கள் வீட்டிலேயே தங்கி, போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்க்குமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 26 முதல் மே 3 வரை நடைபெறும் நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான பாகிஸ்தான் சூப்பர் லீக், அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர், ‘வீட்டிலிருந்தே பார்க்கும்’ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அதன் அமைப்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டிகள் நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டு, தற்போது அனைத்துப் போட்டிகளும் லாகூர் மற்றும் கராச்சியில் நடத்தப்படுகின்றன.

“ஒரு மாதத்திற்கும் மேலாகத் தினமும் பயணம் செய்யும் சராசரியாக 30,000 ரசிகர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய துணைப் பணியாளர்கள், எரிசக்தி வளங்களுக்குக் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டது,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் உணவை பெருமளவில் சார்ந்துள்ள பாகிஸ்தான், எரிசக்தியைச் சேமிப்பதற்காக ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்குப் பள்ளிகளை மூடியுள்ளது. மேலும், போரின் தாக்கத்தை நன்கு மதிப்பிடுவதற்காக, அனைத்துலக பண நிதியத்தின் தற்போதைய 7 பில்லியன் அமெரிக்க டாலர் (8.98 பில்லியன் சிங்கப்பூர் டாலர்) திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளையும் நீட்டித்துள்ளது.

மார்ச் 22 அன்று, அரசாங்கம் உயர் ஆக்டேன் எரிபொருளின் விலையை 60 விழுக்காடு உயர்த்தியதுடன், ஒரு கூடுதல் வரியையும் விதித்தது. இதன் மூலம் மாதத்திற்கு ஒன்பது பில்லியன் ரூபாய் (41.3 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 22ஆம் தேதி அன்று ஆற்றிய ஒரு தனி உரையில், நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப், அதிகரித்த எண்ணெய் விலைகளைச் சமாளிக்க அடுத்த சில வாரங்களில் இலக்கு வைக்கப்பட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகப் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்