இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சி கிரிக்கெட் மட்டைச் சின்னத்தை இழந்துள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி அங்குப் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது அவரது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இம்ரானின் கட்சிக்கும் பாகிஸ்தானின் வலிமையான ராணுவத் தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்க முயல்வதாக இம்ரானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சி ராணுவத்தின்மீது குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால், ராணுவம் அதனை மறுத்து வருகிறது.
இந்நிலையில், பிடிஐ கட்சிக்கு கிரிக்கெட் மட்டைச் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று சனிக்கிழமை (ஜனவரி 13) இரவு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி காஸி ஃபயஸ் இசா, அதன் இணையத்தளம் வழியாக அறிவித்தார்.
இதனையடுத்து, வரும் தேர்தலில் பிடிஐ கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் குழம்ப நேரிடலாம்.
“மில்லியன்கணக்கான வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக மோசமான முடிவு இது,” என்று பிடிஐ கட்சி சாடியுள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் பிடிஐ கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிடுவர் என்று அதன் தலைவர் பேரிஸ்டர் கோகர் கான் அறிவித்துள்ளார்.
உட்கட்சித் தேர்தல் நடத்தாததன் அடிப்படையில் பிடிஐ கட்சியின் சின்னத்தைப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு, தேசிய அளவிலான தேர்தலில் பங்கெடுக்கும் ஒரு கட்சி, உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும்.
ஆணையத்தின் முடிவை எதிர்த்து பிடிஐ கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாலும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாலும் பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இம்ரானின் முதன்மையான எதிரியும் மும்முறை பிரதமர் பதவி வகித்தவருமான நவாஸ் ஷரிஃப் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தலில் போட்டியிட அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையும் நீக்கப்பட்டுவிட்டது.