இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிணைக் கோரிக்கை மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் புதன்கிழமை தெரிவித்தார்.
அரசாங்க இரகசியங்களை வெளியிட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தி விசாரிப்பது சட்ட விரோதம் என்று இன்னொரு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று குறிப்பிட்டிருந்தது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்குமுன் சிறையிலிருந்து வெளியாகி, தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் நம்பிக்கையுடன் இம்ரான் கான் சட்ட ரீதியாகப் போராடி வருகிறார்.
கடந்த 2018-2022 காலகட்டத்தில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசுப்பொருள்களைச் சட்டவிரோதமாக விற்றார் என்று 71 வயது இம்ரான்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதன் தொடர்பில் அவருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிணை கேட்டு இம்ரான் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு அடுத்த விசாரணையின்போது பிணை தொடர்பில் முடிவெடுக்கப்படும்,” என்று ‘எக்ஸ்’ சமூக ஊடகம் வழியாக வழக்கறிஞர் நயீன் பஞ்சுத்தா தெரிவித்துள்ளார்.
விசாரணைத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் இம்ரானின் பிணை மணு தொடர்பில் அரசாங்கத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்கும் என்றும் நயீம் கூறியுள்ளார்.

