கராச்சி: மருத்துவக் குணங்கள் நிறைந்த அரிய வகை மீனை விற்று, ஒரே நாளில் பணக்காரரானார் பாகிஸ்தான் மீனவர் ஒருவர்.
ஹாஜி பலூச் என்ற அம்மீனவர், ஒரே ஒரு நாளில் தாம் பிடிக்கும் மீன்கள் தமது வாழ்வையே மாற்றிவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
கராச்சி நகருக்கு அருகிலுள்ள இப்ராகிம் ஹைதெரி எனும் சிற்றூரைச் சேர்ந்த பலூச், தம் ஊழியர்களுடன் சேர்ந்து ‘சோவா’ என்ற மீனைப் பிடித்தார். இது, அரபிக்கடலில் கிடைக்கும் தங்க மீன் எனச் சொல்லப்படுகிறது.
அவர்கள் பிடித்த மீன்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை கராச்சி துறைமுகத்தில் ஏழு கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு (S$337,700) ஏலம் போயின என்று பாகிஸ்தான் மீனவச் சங்கம் ஒன்றின் தலைவர் முபாரக் கான் சொன்னதாக பிடிஐ செய்தி தெரிவித்தது.
சோவா மீனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் பொருள்கள் சிறந்த மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பதால் அது அரியவகை மீனாகக் கருதப்படுகிறது.
ஒரு ‘சோவா’ மீன் மட்டும் 70 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு ஏலம் போனது என்று பலூச் கூறினார்.
அது 1.5 மீட்டர் நீளம் வரைக்கும் வளரலாம் என்றும் 20 முதல் 40 கிலோ எடை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“கராச்சி கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது பல தங்க மீன்கள் வலையில் சிக்கின. இது எங்களுக்குப் பேரதிர்ஷ்டம்,” என்றார் பலூச்.
கிடைத்த பணத்தைத் தனது ஏழு ஊழியர்களுடன் பங்கிட்டுக் கொள்ளப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, இன்னொரு பாகிஸ்தான் மீனவர் வலையில் சிக்கிய 48 கிலோ ‘சோவா’ மீன் 86.4 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக ஜியோ செய்தி தெரிவித்தது.