பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சுங்கை புலோ சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய ஒரு பாகிஸ்தானியரின் காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 30 விநாடிக் காணொளியில் இடமாற்றம் செய்யப்படுவதற்காக, ஒரு லாரியில் இருந்து பல கைதிகள் வரிசையாகக் கீழே இறங்குவதைக் காணமுடிந்தது. அச்சமயத்தில், ஆரஞ்சு நிறச் சீருடை அணிந்திருந்த விசாரணை கைதியான அந்தப் பாகிஸ்தானியர் திடீரென தப்பி ஓடினார்.
அப்போது பணியில் இருந்த நான்கு அதிகாரகளில் இருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். மீதம் இருந்த அதிகாரிகள் மற்ற கைதிகளைக் கண்காணித்து சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
சுங்கை புலோ சிறைச்சாலையின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி முகம்மது ஹாஃபிஸ் முகம்மது நூர், மலேசிய எல்லைக் காவற்படைகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தப்பியோடிய கைதி குறித்து விழிப்பு நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
முகம்மது ஹசான் என்ற அந்த 24 வயது ஆடவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் பாலியல், களவு, குடிநுழைவு சம்பந்தப்பட்ட குற்றங்களும் அடங்கும்.

