ஹனோய்: 2024ஆம் ஆண்டில் ஆசியாவைத் தாக்கும் வலிமையான புயலான ‘யாகி’ புயலின் தாக்கத்திலிருந்து வியட்னாம் இன்னும் மீளவில்லை. அந்நாட்டின் தலைநகரான ஹனோய்யின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வியட்னாமின் வடக்குப் பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளம் போன்றவை ஏற்பட்டுள்ளன.
‘யாகி’ புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிக் குறைந்தது 197 பேர் உயிரிழந்ததாகவும் 128 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கிட்டத்தட்ட 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் வியட்னாமிய பேரிடர் நிர்வாக அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேலும், “தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் அணைக்கட்டுகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஹனோய் நகரையும் நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த சில மாநிலங்களும் ஆபத்தில் உள்ளன,” என அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆற்றின் அருகே வசித்த ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.
ஹனோயின் வடக்குப் பகுதிகள் நிலச்சரிவு, கடுமையான வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வியட்னாம் அரசாங்க ஊடகம் வெளியிட்ட அறிக்கைத் தெரிவிக்கிறது.