விமான ஊழியரைக் கடித்த பயணி கைது

விமான ஊழியரைக் கடித்த பயணி கைது

1 mins read
1592da9b-c25c-46d4-b99b-fb8bc60e0e89
தொல்லை தந்த பயணியால் விமானம் பிரெஞ்சு பாலினீசியாவின் தலைநகரான பாப்பியேட்டேவில் தரையிறக்கப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: விமான ஊழியர் ஒருவரைப் பயணி கடித்ததால் விமானம் வேறு இடத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மே 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டாலஸ் நோக்கிப் புறப்பட்ட குவான்டாஸ் விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

தொல்லை தந்த பயணியால் அவ்விமானம் பிரெஞ்சு பாலினீசியாவின் தலைநகரான பாப்பியேட்டேவில் தரையிறக்கப்பட்டது.

அப்பயணியை விமானத்தின் சக பயணிகளே கட்டுப்படுத்திப் பிடித்துவைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

விமானம் தரையிறங்கியதும் உள்ளூர் அதிகாரிகள் விரைந்து சென்று, அவரைக் கைதுசெய்ததாக ‘9நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெட்ஸ்டார் உட்பட குவான்டாஸ் குழும விமானங்கள் அனைத்திலும் பறக்க முடியாதபடி அப்பயணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணியிடம் கடிபட்ட விமான ஊழியர்க்குக் கடுமையான காயம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், “எங்கள் பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறோம். விமானத்தில் தொல்லைதரும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொள்வதை அறவே பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று குவான்டாஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்