ஜார்ஜ் டவுன்: நோயாளிகளிடம் அநாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டதன் தொடர்பில் பினாங்கு மாநில மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் 43 வயது மருத்துவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக மூன்றாவது புகார் காவல்துறையிடம் அளிக்கப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவரின் தடுப்புக்காவல் காலம் மார்ச் 10ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மூன்றாவது புகாரால் மீண்டும் கைது செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
“மிக அண்மையில் செய்யப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணையைத் தொடர வேண்டியுள்ளது. இன்னொரு பெண்ணும் மருத்துவரால் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது,” என்று காவல்துறை குறிப்பிட்டது.
மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து மருத்துவர் முதன்முதலாக பிப்ரவரி 26ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். பின்னர், மார்ச் 2ஆம் தேதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதையடுத்து கடந்த ஆண்டு புலாவ் திக்குஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்தில் இன்னொரு பெண் நோயாளியிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகத்தின் பேரில் மார்ச் 6ஆம் தேதி மருத்துவர் மீண்டும் கைதானார்.
பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவருக்கு எதிராகப் புகார் அளித்தார். மருத்துவமனைக்கு பிப்ரவரி 20ஆம் தேதி இதயப் பரிசோதனைக்காகச் சென்றிருந்தபோது தமது ஆடைகளை அகற்ற வேண்டும் என்று சந்தேக நபர் கூறி நம்ப வைத்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார்.

