வினாடிகளில் மட்டும் தூங்குவதாக சின்ஸ்டிராப் பெங்குவின் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியுள்ளதால், பரிணாம வளர்ச்சியடைந்து பெங்குவின் பறவைகள் இவ்வாறு துயில் கொள்கின்றன.
மனிதர்களுக்கு சில வினாடிகள் தூங்குவது தூக்கமின்மையின் அடையாளம். சில சந்தர்ப்பங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு அது ஆபத்தாகவும் போய்விடும். இருப்பினும் மனிதர்களுக்கு ஒவ்வாத சில பழக்கங்கள் விலங்குகளுக்குப் பொருந்தி நன்மையளிக்கவும் வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் சின்ஸ்டிராப் வகை பெங்குவின் பறவைகள் நாளுக்கு ஆயிரம் முறை தூங்குவதாக அறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அவை சிறிது சிறிதாக 4 வினாடிகள்தான் தூங்கினாலும் தினசரி தேவையான 11 மணி நேரத்தை எட்டிவிடுகின்றன என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.
முன்பு இருந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, சில விலங்குகளில் தூக்கத்தின் பலன்கள் படிப்படியாக உணரப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு காதிலிருந்து மறு காதுவரையிலும் மெல்லிய கறுப்புக்கோடு போன்ற அமைப்பைக் கொண்ட சின்ஸ்டிராப் வகை பெங்குவின் பறவைகளே உலகில் அதிகமாக வாழ்கின்றன.
சுமார் 8 மில்லியன் எண்ணிக்கை கொண்ட இப்பறவைகள் தென்துருவப் பகுதியில் உள்ள அன்டார்டிக் தீபகற்பத்திலும் தென் அட்லான்டிக் பெருங்கடலின் தீவுகளிலும் காணப்படுகின்றன.

