ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறைத் தலைவர் முகம்மது ஆல்வி ஸைனல் அபிதின் தெரிவித்துள்ளார்.
அந்தக் கும்பல் தொடர்பில் ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பேராக் காவல்துறைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கையில் இறங்கியது.
அதன் பயனாக, கடந்த திங்கட்கிழமை (ஜூன் 22) இரவு 8.45 மணியளவில் பெங்கலான் தியாரா என்னும் இடத்தில் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரின் வயது 17.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இருந்ததாக திரு முகம்மது ஆல்வி புதன்கிழமை (ஜூன் 24) இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் நடவடிக்கைகளில் தொடர்புடைய வீடு ஒன்றில் அந்தக் கைதுச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார்.
பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கெட்டமின் போதைப்பொருளும் 1.1 கிலோஎடையுள்ள எரிமின்- 5 போதை மாத்திரைகளும் அந்த இடத்தில் கைப்பற்றப்பட்டது எனவும் அவற்றின் மதிப்பு 120,050 ரிங்கிட் எனவும் அறிக்கை தெரிவித்தது.
அந்தக் கும்பல் கிட்டத்தட்ட ஈராண்டுகளாகச் செயல்பட்டு வந்தது விசாரணைமூலம் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொருவருக்கான விசாரணைக் காவல் கோரிக்கையை ஈப்போ கீழ்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

