பெர்த்: ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அந்நாட்டு அமைச்சர்கள் உறுதியளித்த போதிலும், நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 165 நிலையங்களில் டீசல் இல்லை என்றும் 298 நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு வகை பெட்ரோலாவது தீர்ந்துவிட்டதாகவும் தி சிட்னி மார்னிங் ஹெரால்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் உறுதிப்படுத்தினார்.
எரிபொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க அவர், சில தொழில்நுட்பத் தரநிலைகளைத் தளர்த்தியுள்ளார்.

