ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் துறைமுகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட பொருளான பெட்ரோலை சட்டவிரோதமாக எண்ணெய்க் கப்பலுக்கு மாற்ற முயன்ற சந்தேகத்தின் பேரில் 10 பேரை அந்நாட்டு அதிகாரிகள் மார்ச் 11ஆம் தேதி கைதுசெய்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து 1.6 மில்லியனுக்கும் (4.9 மில்லியன்) அதிகமான மதிப்புள்ள பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
நங்கூரமிடப்பட்டிருந்த ஓர் எண்ணெய்க் கப்பலுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை மலேசியாவின் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் தடுத்து வைத்ததாக அதன் அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடம் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 15) தெரிவித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.
முதற்கட்ட சோதனையில், அந்தக் கப்பலில் இருந்த பல உலோகக் கலன்களில் பெட்ரோல் எனச் சந்தேகிக்கப்படும் திரவம் இருந்தது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், “அக்கப்பலின் நான்கு முக்கிய உலோகக் கலன்களில் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மொத்த அளவு கிட்டத்தட்ட 929,124 லிட்டர். அதன் மதிப்பு சுமார் 2.6 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது,“ எனத் திரு அஸ்மான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் வகையில் ஒன்பது வெளிநாட்டினரும் மலேசியர் ஒருவரும் என 10 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எண்ணெய்க் கப்பல், லாரி, பெட்ரோல் எனச் சந்தேகிக்கப்படும் திரவம் ஆகியவற்றுடன், பெட்ரோலை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ரப்பர் குழாய்கள், கப்பல் போக்குவரத்து ஆவணங்கள், எண்ணெய்க் கப்பலின் ஆவணங்கள் போன்றவற்றை அமைச்சு பறிமுதல் செய்ததாக திரு அஸ்மான் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 4,902,952 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

