மணிலா: பிலிப்பீன்சின் மத்திய லுஸோனில் உள்ள தனது வீட்டில் பட்டாசு கொளுத்திய 4 வயதுச் சிறுவன் ஒருவன் தனது வலக்கை விரல்கள் அனைத்தையும் இழந்ததைத் தொடர்ந்து சட்டவிரோதப் பட்டாசுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார உதவிச் செயலாளர் எரிக் தயாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் காயமடைந்தோரில் ஆக இளையவனான அந்தச் சிறுவன் கழுத்திலும் காயங்களை எதிர்கொண்டான்.
“அத்தகைய ஆபத்தான, சட்டவிரோதப் பட்டாசுகள் இளம் குழந்தைகளை எவ்வாறு சென்றடைகின்றன என்பது குறித்து சுகாதாரத் துறை மிகுந்த கவலை தெரிவித்துள்ளது,” என்று டாக்டர் தயாக் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
“பிலிப்பீன்ஸ் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் அத்தகைய சட்டவிரோதப் பட்டாசுகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மக்கள் பட்டாசுகளைச் சொந்தமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, சமூக வாணவேடிக்கைக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்படியும் சுகாதாரத் துறை உள்ளூர் அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 30 நிலவரப்படி, பட்டாசு தொடர்பான விபத்துகளில் காயமடைந்ததால் குறைந்தது 115 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.