மணிலா: பிலிப்பீன்சின் வடக்குப்பகுதியில் வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுநிலையால் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது நால்வர் உயிரிழந்துவிட்டனர். இந்தத் தகவலை பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியிட்டனர்.
கடந்த நான்கு நாள்களாக நாட்டின் முக்கியத் தீவான லூசோனில் கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகர் மணிலா மற்றும் வடமாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்குயெட் மாநிலத்தில் உள்ள சிறிய உணவகம் ஒன்றின் மீது மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், சமையலறையிலிருந்த ஊழியர்கள் மூவர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதற்கு முந்தைய நாள் அண்டை மாநிலமான ரிசாலில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ‘குஜிரா’ வெப்பமண்டலப் புயலாக இருந்த இக்காற்றழுத்தத் தாழ்வுநிலை, மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் பிலிப்பீன்ஸ் கடலை நோக்கி நகர்ந்து வருகிறது.
தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட அதிக சாத்தியம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


