மணிலா: பிலிப்பீன்சின் மத்தியப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை திங்கட்கிழமை (ஜூன் 22) தகவல் வெளியிட்டுள்ளது.
லெய்தே மாநிலத்தில் உள்ள டக்ளோபன் நகரின் சான் ஜோஸ் தேசிய உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணிவாக்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரைத் தேடிவருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்தப் பள்ளியில் காவலர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பிலிப்பீன்சில் இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு கியூசான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் லாமிட்டன் நகரின் முன்னாள் மேயர் ரோஸ் ஃபுரிகாய் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

