சோல்: தென்கொரியத் தலைநகரில் புறாக்களுக்கு உணவளிப்போருக்கு அந்நாட்டு வோன் நாணயத்தில் ஒரு மில்லியன் (S$910) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கடுமையான அபராதம் ஜூலை மாதம் முதல் நடப்புக்கு வருகிறது.
குவாங்வாமுன் சதுக்கம், ஹங்கேங் ஆற்றோரப் பூங்காக்கள், சோல் வனப் பகுதி போன்றவற்றில் புறாக்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பகுதிகளில் புறாக்களுக்கு உணவளித்துப் பிடிபடுவோருக்கு முதல் முறை 200,000 வோன், இரண்டாம் முறை 500,000 வோன் வரை அபராதம் விதிக்கப்படும். மூன்றாம் முறை அந்தக் குற்றத்தை செய்வோருக்கான அபராதம் ஒரு மில்லியன் வோன்.
சோல் பெருநகர நிர்வாகம் புதன்கிழமை (ஏப்ரல் 9) இதனை அறிவித்தது.
சோல் நகரம் முழுவதும் 38 இடங்களில் ‘தீங்கு விளைவிக்கும் காட்டு விலங்கினங்கள்’ என்று குறிக்கப்பட்ட இடங்களில் விலங்குகளுக்கு உணவளிக்கத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கையில் இடம்பெறும் பகுதிகளில் நாம்சன் பூங்கா, உலகக் கிண்ண பூங்கா, கனவு வனம் போன்றவை சுற்றுலாத்தலங்கள்.
சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் புறாக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்த புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெருநகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

