யூன் சுக் இயோலின் விவகாரம்: வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட விமானி, துணை விமானி

யூன் சுக் இயோலின் விவகாரம்: வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட விமானி, துணை விமானி

1 mins read
9b535fbc-93a0-4da1-a335-af9049fa07f4
நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இருவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக கொரியன் ஏர் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பற்றியும் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அவர் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது பற்றியும் விவாதத்தின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றி, கொரியன் ஏர் விமானத்தின் விமானியும் துணை விமானியும் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதை அவ்விமான நிறுவனம் ஏப்ரல் 7ஆம் தேதி உறுதிப்படுத்தியது.

டிசம்பர் 2024ல் இஞ்சியோனில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பனுக்குப் பறந்த விமானத்தின் இரண்டு விமானிகளுக்கு இடையே இந்த ‘துரதிர்ஷ்டவசமான நிகழ்வு’ நடந்ததாக கொரியன் ஏர் தெரிவித்தது.

அரசியல் கருத்துகருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட இந்த வாக்குவாதம் விமானப் பயணத்தின்போது நடக்கவில்லை. ஆனால் விமானமும் விமானக் குழுவினரும் இன்னும் ஆஸ்திரேலியாவில் இருந்தபோதுதான் நடந்தது. இதன் விளைவாக இருவருக்கும் உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

விமானத்தை இயக்குவதில் இருந்து அவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதால், இரண்டு நாள்களுக்குப் பிறகு இஞ்சியோன் திரும்பும் விமானத்தை இயக்க, அந்நிறுவனத்தின் மாற்று விமானக் குழுவினர் அனுப்பப்பட்டனர்.

நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இருவரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக கொரியன் ஏர் தெரிவித்தது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, கொரியன் ஏர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் குறித்த பயிற்சி அமர்வுகளை நடத்தியதாகக் கூறியது என்று தி கொரிய ஹெரால்டு செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்