பேங்காக்: தமது மனைவியை அவர் பணிசெய்யும் நகராட்சி பாலர் பள்ளியில் புதன்கிழமை சுட்டுக்கொன்றுவிட்டு வீடு திரும்பி அங்கு தாளிட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி வியாழக்கிழமை (செப்டம்பர் 10) காலை 7.20 மணியளவில் சரண் அடைந்தார்.
வீட்டை விட்டு வெளியேறும்படி அவரது மகன் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில் அந்த அதிகாரி அமைதியாகக் காவல்துறையிடம் 18 மணிநேரம் கடந்து சரண் அடைந்துள்ளார்.
தாய்லாந்தின் பாங் லாமுங் காவல்நிலையத்தின் குற்றத்தடுப்பு, அடக்குமுறைப் பிரிவின் துணை ஆய்வாளரும் துணைப் படைத் தலைவரும் ஆகிய தட்சாபொங் தொங்சாட் என்று அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி அவரது துப்பாக்கியை வீட்டில் வைத்துவிட்டு ஆயுதமின்றி அதிகாரிகளிடம் சரணடைந்தார். அவருக்கு முவாட் ஓ என்ற மறுபெயரும் உண்டு.
அந்த ஆடவர் பணியாற்றிய காவல்நிலையத் துணை மேற்பார்வையாளர் சரவாட் நசனார்ட், எவ்விதத் தடைகளையும் ஏற்படுத்தாமல் தமது மகனின் வேண்டுகோளுக்கு ஏற்ப தட்சபோங் சரண் அடைந்ததாகத் தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் “ப்பிளே“ என்று அறியப்படுகிறது. ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி அவர் பணியாற்றிய பள்ளி சனிக்கிழமை (செப்டம்பர் 11) வரை மூடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நாள்முதல் காவல்துறையினர் அந்த அதிகாரியின் வீட்டை முற்றிலும் சூழ்ந்து அவரைச் சரண் அடையும்படி பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

