கோலாலம்பூர்: மலேசியாவில் 2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையே, போதைப்பொருள் குற்றங்களுக்காகக் காவல்துறையைச் சேர்ந்த 1,800க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டனர்.
மலேசிய உள்துறை அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.
ஆபத்தான போதைப்பொருள்கள் சட்டத்தின்கீழ் அந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 91 காவல்துறை அதிகாரிகளும் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த 1,778 அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டதாக அமைச்சு கூறியது.
அவர்களில், 958 பேர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எஞ்சியிருக்கும் 911 பேர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றனர் அல்லது சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் அமைச்சு அந்தக் கருத்துகளைத் தெரிவித்தது.
கடந்த 2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையே போதைப்பொருள் புழங்கிய காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஓன் அபு பக்கர் கேள்வி எழுப்பினார்.
அந்த நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அதற்குப் பதில் அளித்தது.
தொடர்புடைய செய்திகள்
“அந்தக் காலகட்டத்தில், காவல்துறையைச் சேர்ந்த 511 அதிகாரிகள்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 324 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் எச்சரிக்கப்பட்டனர் அல்லது பதவியிலிருந்து இறக்கப்பட்டனர்,” என்று அமைச்சு கூறியது.

