வத்திகன்: போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் பிப்ரவரி 11ஆம் தேதி, தமது சொந்த நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த முதல் பெண் அருட்தொண்டர் ஒருவரை, புனிதத்துவம் பெற்றவராக அறிவித்து அவரது நிலையை உயர்த்தவிருக்கிறார்.
வத்திகனில் நடைபெறும் அந்த நிகழ்வில் அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெய் கலந்துகொள்கிறார்.
கடந்தகாலத்தில் திரு மிலெய், போப்பாண்டவர் ஃபிரான்சிசுக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இருப்பினும், கடந்த டிசம்பரில் பதவியேற்ற பிறகு அவர் சற்று சாதுவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த அவமதிப்பான கருத்துகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்று போப்பாண்டவர் கூறினார்.
திருவாட்டி மரியா அண்டோனியா டி பாஸ் வை ஃபிகுவேரொவா அல்லது ‘மாமா அண்டுலா’ என்றழைக்கப்படும் அந்த 18ஆம் நூற்றாண்டுப் பெண்மணியை, புனிதத்துவம் பெற்றவராக அறிவித்து அவரது நிலையை உயர்த்தும் நிகழ்ச்சியை போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் வழிநடத்துகிறார்.
மாமா அண்டுலா அவரது குடும்பச் செல்வங்களைக் கைவிட்டு, தருமம் செய்வதிலும், ஆன்மிகப் பணிகளிலும் கவனம் செலுத்தினார்.
அர்ஜெண்டினா பல்லாண்டுகளில் அதன் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் வேளையில், அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

