பெட்டாலிங் ஜெயா: பிரபல மலேசிய பாப் இசைப் பாடகி சித்தி நூர்ஹாலிசா வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 16) மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார்.
நிகழ்ச்சி ஒன்றுக்குப் பிறகு சித்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக சித்தியின் நிர்வாகி ரோசி சாங்தேவி இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
“நாங்கள் இரண்டு கார்களில் சென்றுகொண்டிருந்தோம். சிப்பாங்கில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு விபத்து நிகழ்ந்தது,” என்றார் அவர்.
சித்தி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்ஸ்டகிராமில் 30 விநாடிகள் கொண்ட காணொளிப் பதிவு ஒன்றில், தமது காலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தைத் தவிர தமக்கு வேறு எந்தப் பலத்த காயமும் ஏற்படவில்லை என்று சித்தி கூறினார்.
“நான் எக்ஸ்-ரே எடுத்துள்ளேன். காலில் கட்டுப் போட்டுள்ளேன். எனவே நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

