மலேசியாவில் இவ்வாண்டு பொதுத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு குறைவு

மலேசியாவில் இவ்வாண்டு பொதுத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு குறைவு

2 mins read
பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2b16655c-de40-4f66-9049-f46b27622ed2
மற்ற கட்சிகளைவிட அன்வாரின் கட்சி சிறப்பாக ஆட்சி நடத்துவதால் மக்கள் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

தனது ஆட்சிக்கு நெருக்கடி தரும் பெருநிறுவனக் கும்பலைத் துடைத்தொழிப்பதில் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது பொதுமக்கள் இடையேவும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் பெரு நிறுவனங்கள் தங்களது செல்வத்தைப் பயன்படுத்தி மலேசிய அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அன்வார் தரப்பு குறைகூறுகிறது.

மக்களின் அதிருப்தி காலப்போக்கில் மறைந்துவிடும் என்றும் மற்ற கட்சிகளைவிட அன்வாரின் கட்சி சிறப்பாக ஆட்சி நடத்துவதால் மக்கள் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் பக்கத்தான் ஹரப்பானின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதே நேரம் எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவும் திரு அன்வாருக்குச் சாதகமாக இருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின்மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது பிரச்சினைகளை அதிகமாக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கிமீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும் அவருக்கு அன்வார் நிர்வாகம் பாக்கியின் பதவிக் காலத்தை மூன்று முறைப் புதுப்பித்துள்ளதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல் கடந்த பிப்ரவரியில் ஃபுளூம்பெர்க் செய்தி நிறுவனம் ஊழல் எதிர்ப்பு ஆணையம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

அடுத்த பொதுத் தேர்தல்

மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்தல் நடக்கும்போது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சில தரப்பினர் கூறுகின்றனர்.

மலாக்காவில் 2027ஆம் ஆண்டு இறுதியில் மாநிலத் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் ஜோகூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் மாநிலத் தேர்தல் நடத்த ஜோகூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்