பிலிப்பீன்சை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பிலிப்பீன்சை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

2 mins read
aa8e0ef0-9923-4344-9235-bd7f481eed04
கடல்மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - மாதிரிப்படம்: பிக்சாபே

மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டனாவ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் திங்கட்கிழமையன்று (ஜூன் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவானது. இதனை ஜெர்மனியின் புவி அறிவியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனீசியாவின் புவி இயற்பியல் அமைப்புகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பீன்சின் ஜெனரல் சான்டோஸ் நகரில் பல கட்டடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் காவல்துறையினரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவல்படி, அடுத்த சில மணி நேரங்களுக்குள் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தைவான், பலாவ், பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கக்கூடும் என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிலிப்பீன்சின் கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜப்பானிய வானிலை ஆய்வு மையமும் அதன் பசிபிக் கடலோரப் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பிலிப்பீன்சும் இந்தோனீசியாவும் நில அதிர்வுகள் அதிகம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்