வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக வெளியான தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ள வேளையில் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க, ஈரான் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.
உயர்மட்ட ஈரானிய பிரதிநிதிகள் குழு அமெரிக்காவுடன் பேச்சு நடத்த சுவிட்சர்லாந்து சென்று சேர்ந்திருப்பதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
அதேபோல அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.
இருதரப்புப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெறும் வேளையில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படை சனிக்கிழமை (ஜூன் 20) கூறியது.
அந்த நீரிணையில் வர்த்தகக் கப்பல் பயணம் தொடர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் கூறிய வேளையில் அந்தப் படை இவ்வாறு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பு பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
லெபனானில் போர்நிறுத்தம் பற்றி அமெரிக்கா தெரிவித்த உறுதிமொழிகளை இஸ்ரேல் மீறிவிட்டதாகவும் அதனால் ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் கப்பல்கள் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
அதே வேளை, உலகச் சந்தைகளுக்காக 17 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயுடன் 55 வர்த்தகக் கப்பல்கள் சனிக்கிழமை (ஜூன் 20) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

