வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையில் முடங்கி நின்ற கப்பல்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் திட்டத்தில் சவூதி அரேபியா அதன் விமானத் தளங்களையும் வான்வெளியையும் பயன்படுத்த அனுமதி மறுத்தது.
அதனால்தான் அமெரிக்க அதிபர் ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்த மறுநாளே அதனை நிறுத்திவைக்க நேரிட்டது.
இதன் விவரங்களை சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 8) ஊடகத்திடம் வெளியிட்டனர்.
சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது சல்மானிடம் அதிபர் நேரடியாக தொலைபேசியில் பேசியும் அதற்கான ஒப்புதலைப் பெறமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஆபரேஷன் எபிஃக் ஃபியூரி’ என்ற பெயரில் பிப்ரவரி மாதம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்புடன் கப்பல்களை கடந்து செல்ல உதவும் ‘ஃபுரோஜெக்ட் ஃபிரீடம்’ என்ற பெயரில் அமெரிக்கா திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்தது.
அவ்வாறு நடந்தால் ஈரான் தாக்குதலை மீண்டும் தொடங்கி, நடப்பில் உள்ள சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருவதை சவூதி அரேபியா விரும்பவில்லை.
அதனால், அமெரிக்காவின் திட்டப்படி, சவூதி அரேபியாவில் உள்ள ஃபிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
நடந்துவரும் போருக்கு எப்படியாவது நிரந்தரத் தீர்வு காண சவூதி அரேபியா முயல்வதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்தனர்.
அதே வேளையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ), ஓபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளது.
அனைத்து அரபு நாடுகளையும் உள்ளடக்கிய அரபு லீக் அமைப்பை விட்டு விலகுவதையும் யுஏஇ பரிசீலித்து வருகிறது.
மத்திய கிழக்குப் போரில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் பொருளியல் சரிந்து அனைத்துலக ரீதியில் அந்நாடு நன்மதிப்பை இழந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படும் ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் 2020ஆம் ஆண்டு, யுஏஇ, பஹ்ரேன் ஆகிய நாடுகள் அமெரிக்கத் தலைமையில் இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்திக்கொண்டன. அதலிருந்து இஸ்ரேலுடன் யுஏஇ நல்லுறவை கடைப்பிடித்து வந்துள்ளது.
ஈரான் நடத்திவரும் தாக்குதலில் பெரிய அளவில் குறிவைக்கப்பட்டு அவதியுறும் யுஏஇ அரபு நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி செயல்படுவதைக் கண்டு சீற்றம் அடைந்துள்ளது.

