சோல்: ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காத நாடுகளை அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாகச் சாடினார்.
முதலில் வட அட்லான்டிக் பெருங்கடல் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகளின்மீது (நேட்டோ) தமது கோபத்தை வெளிப்படுத்திய அதிபர் டிரம்ப், தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பிறகு கடிந்துகொண்டார்.
மத்திய கிழக்குப் போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, வர்த்தகப் போக்குவரத்துக்கு ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படுத்திய தடைகளை அகற்ற அங்குப் போர்க் கப்பல்களை அனுப்பும்படி திரு டிரம்ப் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் அதிபர் டிரம்ப்பின் அறைகூவலுக்குச் செவிசாய்க்காமல் இருந்துவிட்டன.
“தென்கொரியா எங்களுக்கு உதவவில்லை. அமெரிக்காவின் 45,000 வீரர்கள் அந்நாட்டில், அணுவாயுத நாடான வடகொரியாவின் வாசலில் எந்நேரமும் ஆபத்தின் விளிம்பில் பணியாற்றுகின்றனர்,” என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தமது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.
ஆனால் தென்கொரியாவில் தற்போது 28,500 அமெரிக்க வீரர்களே உள்ளனர்.
அமெரிக்காவுக்கு உதவாத நேட்டோ நாடுகளைத் தண்டிக்க அதிபர் டிரம்ப் திட்டமிடுவதாகக் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) அந்நாட்டின் ‘த வால்ஸ்திரீட் ஜர்னல்’ ஊடகம் தெரிவித்தது.
நேட்டோ கூட்டமைப்பில் இருந்து விலகி, ஐரோப்பிய வட்டாரங்களில் அந்த அமைப்புக்கு உதவியாக இயங்கும் அமெரிக்க ராணுவத்தினரை மீட்டுக்கொள்ளப்போவதாகச் சில வாரங்களாகவே திரு டிரம்ப் மிரட்டி வருகிறார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

