வாஷிங்டன்: ஈரானியத் துறைமுகங்களை முடக்குவதாகவும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அடுத்த வாரத்துக்குள் அந்நாட்டு மின்னுற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்க்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகத் தொடரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதன் பல ராணுவத் தளவாடங்கள்மீது அமெரிக்கா புதியத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அதனை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியது.
இருநாடுகளுக்கு இடையே கடந்த வாரம் மீண்டும் பூசல் வெடித்ததால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) அறிவித்தது.
பல மாதங்கள் இதேபோன்று நடந்த ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜூன் மாதம் எட்டப்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு தற்போது நிலைகுலைந்துவிட்டது. இதுவரை நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர்.
எரிசக்தி உற்பத்திக்கான இலக்குகளைத் தாங்கள் இறுதியாகவும் உறுதியாகவும் தாக்குவோம் என்று அதிபர் டிரம்ப், ஃபாக்ஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலின்போது சூளுரைத்தார்.
பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அடுத்த வாரம் மின்னிலையங்களை அழித்து, அதன்பின் பாலங்களைக் குறிவைப்போம் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் 1949ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மனிதநேய உடன்படிக்கையின்படி, போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு இன்றிமையாததாகக் கருதப்படும் இடங்களைத் தாக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

