இணையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுவந்த மூன்று பொருள்களை வாங்கவோ உட்கொள்ளவோ கூடாது எனப் பொதுமக்களுக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘சி-நைன் டயட்டரி மருந்துப் பொருள்’ (C-Nine Dietary Supplement Product), ‘சுவே யா காவ் ஸொங் ஃபெங் சிங் சாவ் யாவ் சாவ்’ (Xue Ya Gao Zhong Feng Qing Cao Yao Cao), ‘பி-லியென்-எஸ் மூலிகைப் பூச்சு’ (B-LIAN-S HERBAL CREAM) ஆகியவையே அவை.
அந்தப் பொருள்கள் எந்தவித மருத்துவப் பொருள்களும் சேர்க்கப்படாத சத்துணவு அல்லது மூலிகைப் பொருள்களாக விளம்பரப்படுத்தப்பட்டன. இருப்பினும், மருத்துவர்களிடமிருந்து வந்த புகார்களையும் பொதுமக்களின் கருத்துகளையும் தொடர்ந்து, ஆணையம் அவற்றைச் சோதனை செய்தது.
அவற்றில் ஊக்க மருந்துகள், தடைசெய்யப்பட்ட ‘சிபுடிராமின்’ (sibutramine) போன்ற வீரியமிக்க மருத்துவப் பொருள்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவ ஆலோசனை இன்றி அவற்றை உட்கொள்வது உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் என்று ஆணையம் கூறியது. அப்பொருள்களைப் பயன்படுத்தியதால், 12 வயதுச் சிறுமி உட்பட மூன்று பேருக்கு படபடப்பு உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.
அவற்றைப் பயன்படுத்தியவர்கள் உடனே மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவை சட்டவிரோதமான பொருள்கள் என்பதால், அங்கீகரிக்கப்பட்ட விநியோகிப்பாளர்கள் எவரும் இல்லை என்றும் அவை இணையத்தளங்கள் வாயிலாக உள்ளூரில் விற்பனை செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
இணையத்திலிருந்து அந்தப் பொருள்களின் பட்டியலை அகற்றுவதற்கு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விதிமீறும் விற்பனையாளர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

