துபாய்/ரியாத்: ஓமான், ஈரான் இடையே முன்மொழியப்பட்டுள்ள புதிய உடன்பாட்டின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈரானுக்கு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரினால், வட்டார அதிகார சமநிலையில் ஈரானுக்குச் சாதகமான பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாதங்களாகத் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் ஈரானியக் கடற்பகுதியில் அனுமதி வழங்கப்படும். போருக்கு முன்பு, அனைத்துக் கப்பல்களும் எவ்விதக் கட்டணமுமின்றி நீரிணையில் சென்று வந்தன. ஆனால் தற்போதைய முன்மொழிவின்படி, சரக்குகளின் மதிப்பில் 5 முதல் 7 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஓமான் 3 விழுக்காட்டுக் கட்டணத்தைப் பரிந்துரைக்கும் நிலையில், எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதனிடையே, ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், வட்டாரத்தில் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள்மீது பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒப்பந்தம் குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணைத் திறப்பு குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஈரான் ‘நிபந்தனையின்றிச் சரணடைந்தால்தான்’ மோதல் முடிவடையும் என்றும் அதன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தாமே ஒப்புதல் அளிக்கப்போவதாகவும் திரு டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், வரும் நவம்பரில் அமெரிக்காவில் முக்கிய இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஈரானுடனான மோதலிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காண வேண்டிய நெருக்கடிக்கு அவர் தற்போது ஆளாகியுள்ளார்.


