கராச்சி: ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க வெளியுறவுத் துணை அலுவலகத்தின் முதல் வேலியை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறியதால் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலால் அங்கு உயிரிழப்புகள் நேர்ந்தன.
கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனத்துக்கு தீ மூட்டினர். அதனால், பாதுகாப்புப் படையினர் போராடி அவர்களை அப்புறப்படுத்தினர்.
அப்போது நடந்த அமளியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதிக்கு அருகே உள்ள சாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அங்கு துப்பாக்கிச் சூடும் கண்ணீர்புகை வெடிப்பும் கேட்டதாக அறியப்படுகிறது.
பாகிஸ்தானின் பல வட்டாரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தலைநகர் இஸ்லாமாபாத்திலும் கராச்சியிலும் உள்ள அமெரிக்க வெளியுறவுத் தூதரக அலுவலகங்கள் எவ்வித விவரங்களையும் உறுதிசெய்யவில்லை.
நாடாளுமன்றமும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் அமைந்துள்ள இஸ்லாமாபாத்தின் முக்கியப் பகுதியில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பாக்தாத்திலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அந்நாட்டில் இயங்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த அயத்துல்லா அலி காமெனியின் ஆயுதமேந்திய குழுக்களின் ஆதரவாளர்கள், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை நெருங்க முயன்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தனர்.
ஈரானுக்கு அடுத்து, ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் அதிக எண்ணிக்கையில் ஷியா பிரிவினர் வாழ்கின்றனர்.

