மாஸ்கோ: உக்ரேனியப் படைகளுக்கு எதிராக வடகொரிய வீரர்கள் துணிச்சலாகப் போரிட்டதற்காக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நன்றி தெரிவித்தார்.
சீனாவில் நடைபெற்ற சந்திப்பில் கிம்முடன் பேசிய புட்டின், “உங்கள் முன்முயற்சியால், கர்ஸ்க் பகுதியை விடுவிப்பதில் உங்கள் சிறப்புப் படைகள் பங்கேற்றன என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் வீரர்கள் துணிச்சலாகவும் வீரமாகவும் போரிட்டனர்,” என்று புகழாரம் சூட்டினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவின் மேற்கு கர்ஸ்க் வட்டாரத்திலிருந்து உக்ரேனியப் படைகளை வெளியேற்ற வடகொரியப் படைகள் ரஷ்யாவுக்கு உதவின.
“உங்கள் ஆயுதப்படைகளும் உங்கள் படைவீரர்களின் குடும்பத்தினரும் செய்த தியாகங்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,” என்று புட்டின் சொன்னார்.
“ரஷ்ய மக்கள் சார்பாக, இந்தக் கூட்டுப் போரில் நீங்கள் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வடகொரிய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றியைத் தெரிவிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் புட்டின் கூறினார்.