கோலாலம்பூர்: நெடுஞ்சாலையில் சென்றபோது கார் கண்ணாடியில் திடீரென மலைப்பாம்பு தோன்றியதையடுத்து, கார் ஓட்டுநர் தமது வாகனத்தைத் தீயணைப்பு நிலையத்திற்குத் திருப்ப வேண்டியதாயிற்று.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த காணொளி டுவிட்டர் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது.
மலைப்பாம்பு வீசியெறியப்படுவதைத் தடுக்க காரை மெதுவாகச் செல்லும்படி, காரிலிருந்த பெண் ஒருவர் ஓட்டுநரிடம் சொல்வது காணொளியில் கேட்கிறது.
கார் கண்ணாடியில் சிறிது நேரம் ஊர்ந்த அந்த மலைப்பாம்பு, பின்னர் காரின் கூரைப்பகுதிக்குச் சென்றது.
“பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தபோதும் அமைதியாக இருக்க முயன்றேன். அந்த மலைப்பாம்பு தப்பிக்க முயல்வதுபோல் தெரிந்தது. ஆனாலும், கார் இயக்கத்தில் இருந்ததால் அதனால் முடியவில்லை,” என்று சம்பவத்தைப் படம்பிடித்த பெண் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காரை சைபர்ஜெயா தீயணைப்பு நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார் அதன் ஓட்டுநர். அங்கு தீயணைப்பு வீரர்கள் அந்த மலைப்பாம்பை அகற்ற உதவினர்.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 141,000க்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளியைக் கண்டுள்ளனர்.