குவீன்ஸ்லாந்து: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வீசிய ஆல்ஃபிரட் புயலால் பல நூறாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றித் தவிப்பதாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9ஆம் தேதி) குவின்ஸ்லாந்தைத் தாக்கிய ஆல்ஃபிரட் புயல் பரவலான நாசத்தை விளைவிக்கும் காற்று, கனமழை ஆகியவற்றடன் கரை கடந்தது. இதனால், அம்மாநிலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஏறத்தாழ 316,540 பேர் மின் இணைப்பின்றி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரமே பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மட்டும் சுமார் 112,00 பேருக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி விநியோக நிறுவனமான எனர்ஜெக்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் தலைநகர் பிரிஸ்பனை அதிகம் பாதிக்கவில்லை என்றும், மாறாக அண்டை தெற்கு மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலேதான் சூறாவளியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், திடீர் வெள்ளம், பலத்த சூறைக் காற்றால் குவீன்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.