சிட்னி: ஆஸ்திரேலிய வலதுசாரித் தலைவரான பாலின் ஹான்சன், முஸ்லிம் செனட்டர் ஒருவரைப் பாகிஸ்தானுக்கே திரும்பிச் செல்லுமாறு கூறி இனப் பாகுபாடு காட்டியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அவர் அந்தத் தீர்ப்பை எதிர்த்துச் செய்திருந்த மேல்முறையீட்டை, ஆஸ்திரேலிய நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜூலை 27) நிராகரித்தது.
சமூக ஊடகத்தில் கிரீன்ஸ் கட்சி செனட்டர் மெஹ்ரீன் ஃபரூக்கியிடம் கூறப்பட்ட அந்தக் கருத்து சட்டவிரோதமானது என்று 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தீர்ப்பை ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக உறுதி செய்தது.
“இன்று நீதி வென்றுள்ளது,” என்று நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் ஃபரூக்கி கூறினார்.
“நீங்கள் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லுங்கள் என்று கூறப்பட்ட ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்த வெற்றி இது,” என்றார் அவர்.
இந்நிலையில், அந்தத் தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக பாலின் ஹான்சன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“எனது சட்டக் குழுவும் நானும் வரும் நாள்களில் இத்தீர்ப்பை அணுக்கமாக மறுஆய்வு செய்வோம். ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நோக்கில் இது மேற்கொள்ளப்படும்,” என்றும் அவர் கூறினார்.
‘ஒன் நேஷன்’ வலதுசாரிக் கட்சியின் தலைவரான ஹான்சன், செப்டம்பர் 2022ல் இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மறைவுக்குப் பிறகு, ஃபரூக்கி டுவிட்டரில் பதிவிட்ட கருத்து ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாக அக்கருத்துகளைக் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

