பெட்டாலிங் ஜெயா: மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் இரண்டாம் இணைப்பின் ஒரு பகுதியை, சட்டவிரோதமாகப் பந்தயம் நடத்த மோட்டார்சைக்கிளோட்டிகள் சிலர் மூடியதாக நம்பப்படுகிறது.
அதனையொட்டி காவல்துறையினர் மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர்.
அந்த ஆடவர்கள் மூவரும் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாக கூலாய் காவல்துறைத் தலைவர் டான் செங் லீ தெரிவித்தார். நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு விண்ணப்பிக்க அவர்கள் மாவட்ட நீதிமன்றம் ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயம் தொடர்பில் இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக திரு லீ கூறினார் என்று கொஸ்மோ ஊடகம் தெரிவித்தது.
“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன்கீழ் சட்டப் பிரிவு 42(ஐ)ன்கீழ் இந்த வழக்கு தொடர்பில் மேல்விசாரணை நடத்தப்பட்டுவருகிறது,” என்று அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அறிக்கை மூலம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மோட்டார் வாகனங்கள் தொடர்பான உரு சமூக ஊடகப் பிரபலம் உட்பட எட்டு ஆடவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஒத்துழைக்க அவர்கள் நான்கு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கேஎம்33 நுழைவாயிலிருந்து கேஎம்31 நுழைவாயிலுக்கு இடைப்பட்ட பாதையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.


