கோலாலம்பூர்: இனவாத மனப்பாங்கும் மற்ற சமயங்களை இழிவுபடுத்தும் வகையிலும் வெளியிடப்படும் கருத்துகள் மிகுந்த பொறுப்பில்லாத செயல்கள் என்றும், அவை நாட்டின் பல இன மக்கள் வாழும் சமூக ஒற்றுமையைப் பாதிக்கக்கூடும் என்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய கருத்துகள் சிலரின் போலித்தனத்தையும் அறியாமையையும் வெளிப்படுத்துகின்றன. சமயத்தைப் பயன்படுத்தி மக்களிடையே வெறுப்பை விதைக்கும் முயற்சி ஏற்க முடியாதது,” என்றும் அவர் கூறினார்.
தனது சமூக ஊடகமான ஃபேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்த திரு கணபதிராவ், மலேசியா பல இனங்களும் பல சமயங்களும் ஒன்றிணைந்து பரஸ்பர மரியாதையுடன் வாழும் ஒரு நாடு எனக் குறிப்பிட்டார். ஆகையால், வெறுப்பு அல்லது பகைமையைத் தூண்டும் எந்தவொரு கருத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சமயம் என்பது மற்றவர்களின் நம்பிக்கையைத் தாக்குவதற்கோ அல்லது இழிவுபடுத்துவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக, சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் அடிப்படையாக சமயம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

