ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ‘ரேடியோ பேகம்’ என்ற பெண்கள் வானொலி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்துலக மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளிப் பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணைச் சேவையாக ‘பேகம் டிவி’ என்ற செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சமய அடிப்படைவாதத்துடன் செயல்படும் தலிபான்கள், பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர்.
‘ரேடியோ பேகம்’ தடை செய்யப்பட்டது. இந்தத் தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையைத் தலிபான் அரசு நீக்கியுள்ளது.
தலிபானின் தகவல் மற்றும் கலாசார அமைச்சு, சனிக்கிழமை (பிப்ரவரி 22) இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘ரேடியோ பேகம்’ செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.
பத்திரிகைக் கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகத்தின் விதிகளின்படி ஒலிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைகளும் விதிகளும் என்ன என்பது குறித்து அமைச்சு தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

