கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ன் உட்கூரை வழியாக மழை நீர் கசிந்தது.
கனமழை பெய்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 14) இச்சம்பவம் நிகழ்ந்தது.
கத்தார் ஏர்வேஸ் விமானச் சேவைப் பயணிகள் பதிவு செய்துகொள்ளும் இடத்துக்கு அருகில், உட்கூரை வழியாக மழைநீர் பேரளவில் கசிந்ததைக் காட்டும் காணொளிகள் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
பாதிப்புக்குள்ளான இடத்தைச் சுற்றி தடுப்பு போடப்பட்டது.
வழக்கத்துக்கு மாறான கனமழைக்குப் பிறகு மாலை 4.15 மணி அளவில் உட்கூரை வழியாக மழைநீர் கசிந்ததாக விமான நிலையத்தை இயக்கும் மலேசிய ஏர்போர்ட்ஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட இடம் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்துக்குள் புகுந்த மழைநீர் ஒன்றரை மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் அமைச்சு கூறியது.
மழைநீர்க் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

