கோலாலம்பூர்: தானியங்கி ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை அமைக்க அதிகச் செலவாகும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அத்திட்டத்தைத் தொடரப்போவதில்லை என்று மலேசியாவின் புத்ராஜெயா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளதாக திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 9) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, இயக்கம், பராமரிப்பு உட்பட தானியங்கி ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை அமைக்க பத்தாண்டுக் காலகட்டத்துக்குத் தோராயமாக 211.95 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று ஆரம்பகட்ட மதிப்பீடு மூலம் தெரியவந்ததாக மலேசியப் பிரதமர் அலுவலக (கூட்டரசுப் பிரதேசம்) துணை அமைச்சர் லோ சு ஃபூய் தெரிவித்தார்.
“இத்தொகை புத்ராஜெயா கார்ப்பரேஷனின் நிதி ஆற்றலுக்கு உட்பட்டதல்ல. எனவே, புத்ராஜெயாவில் தானியங்கி ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது,” என்றார் திரு லோ.
தானியங்கி ரயில் போக்குவரத்து குறித்து செகிஜாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் திரு லோவின் விளக்கம் அமைந்தது.
செலவுகள், பலன்கள், அபாயங்கள், அரசாங்கத்தின் தற்போதைய நிதி ஆற்றல் ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகத் திரு கோ தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

