நேப்பிடாவ்: மியன்மாரின் சுதந்திர நாளைக் குறிக்கும் வகையில், பொது மன்னிப்பு நடவடிக்கையின்கீழ் 180 வெளிநாட்டவர் உட்பட 5,864 சிறைக் கைதிகளை அந்நாட்டு ராணுவ அரசாங்கம் விடுவிக்கவிருப்பதாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து மியன்மாரில் அரசியல் கொந்தளிப்பு நிலவிவருகிறது. அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்திய ராணுவம் ஜனநாயக ஆதரவிலான ஆர்ப்பாட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியது. அதனால், நாடு முழுதும் ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டது.
இவ்வாண்டு தேர்தலை நடத்தவிருப்பதாக மியன்மார் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும், அது பொய் என்று எதிர்த்தரப்புக் குழுக்கள் சாடியுள்ளன.
ராணுவம் கைதுசெய்தவர்களில் மியன்மாரின் முன்னாள் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சியும் அடங்குவார். 79 வயதான திருவாட்டி சூச்சிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தேர்தல் மோசடி, ஊழல் உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.