பாரிஸ்: ஈரான், உக்ரேன் போர், எல் நினோ பருவநிலை தாக்கம் காரணமாக, ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருள்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) உணவு, வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்துலக அளவில் வணிகம் செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலையைக் கண்காணிக்கும் அந்த அமைப்பின் உணவு விலைக் குறியீடு, ஜூலை மாதத்தில் சராசரியாக 131.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இது ஜூன் மாதத்தின் 130.3 புள்ளிகளைவிட அதிகம் என்பதுடன், 2023 ஜனவரிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
உலக நாடுகள் மீண்டும் ஒரு கடுமையான உணவுப் பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும் என அமைப்பின் தலைமைப் பொருளியல் நிபுணர் எச்சரித்துள்ளார்.
கோதுமை விலை 5.8 விழுக்காடு உயர்ந்ததால், தானியங்களின் விலைக் குறியீடு 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கருங்கடல் வழியிலான ஏற்றுமதித் தடைகள், முக்கிய உற்பத்திப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்ப அலை ஆகியவை கோதுமை சந்தையைப் பெரிதும் பாதித்துள்ளன.
அனைத்துலகக் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தாவர எண்ணெய் விலைக் குறியீடு 2 விழுக்காடும், ஐரோப்பா, ஆசியாவில் நிலவும் நிலவழிச் சூழலால் சர்க்கரை விலை 5.6 விழுக்காடும் உயர்ந்துள்ளன.
எனினும், இறைச்சி, பால் பொருள்களின் விலைக் குறியீடுகள் முறையே 2.8 விழுக்காடும் 0.7 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலிருந்து ஏற்றுமதி குறைந்ததால் ஆட்டிறைச்சி விலை சாதனை அளவை எட்டியுள்ளது. தற்போதைய உணவு விலைக் குறியீடானது 2022 மார்ச் மாதத்தின் உச்சகட்ட சாதனையைவிட 18.2 விழுக்காடு குறைவு.


