கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதின் பேத்தியின் வீட்டுக்குள் கொள்ளையர் புகுந்து 1.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் லேடாங்கில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 22) கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.
1.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டின் பின்புறத்தில் இருக்கும் நுழைவாயில் திறந்திருந்ததாகவும் மகாதீரின் பேத்தியுடைய படுக்கையறை அலங்கோலமாக இருந்ததாகவும் பணிப்பெண் ஒருவர் கண்டார்.
இதுகுறித்து பிற்பகல் 3 மணி அளவில் அவர் தமது முதலாளியிடம் தெரிவித்தார்.
அப்போதுதான் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மகாதீரின் பேத்தி உடனடியாக வீடு திரும்பி தமது உடைமைகளைச் சரிபார்த்தார். தமது படுக்கையறைக்குள் யாரோ பலவந்தமாகப் புகுந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதாக அவர் கூறினார். சோதனையிட்டுப் பார்த்தபோது் தமக்குச் சொந்தமான பல பொருள்களைக் காணவில்லை என்றார் அவர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் நகைகளும் அடங்கும் என்று அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கொள்ளையர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களைக் காவல்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.