குச்சிங்: சரவாக் மாநிலத் தலைநகர் குச்சிங்கில் வீசிய புயல் அந்த மாநிலத்தின் துணை முதல்வரின் வீட்டுக் கூரையைத் தூக்கி வீசியது.
டாக்டர் சிம் குய் ஹியெனின் குடும்ப வீட்டுக்கு இந்நிலை ஏற்பட்டது. குச்சிங்கின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) புயல் வீசியது.
தமது வீட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருந்ததை நினைத்துத் தாம் நன்றியுடன் இருப்பதாக டாக்டர் சிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது தாம் பிந்துலு பகுதியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமது வீடு உள்ள பகுதியின் சுற்று வட்டாரங்களில் மேலும் பல வீடுகளும் ஒரு கடைத்தொகுதியும் புயலால் பாதிக்கப்பட்டதாக டாக்டர் சிம் கூறினார்.
“புயலால் எங்கள் குடும்ப வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டது குறித்துக் கவலை தெரிவித்து குறுந்தகவல்களுக்கு மிகவும் நன்றி,” என்று அவரின் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் அவர் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை, தீயணைப்பு, மீட்புப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.


