ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் விரைவுப் போக்குவரத்து (ஆர்டிஎஸ்) இணைப்புத் திட்டமானது, நகரத்தில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலப் பொதுப் போக்குவரத்து அமைப்புகளுடன் எல்லை தாண்டிய ரயில் சேவையை இணைக்கும் ஒரு பரந்த, ஒருங்கிணைந்த போக்குவரத்துக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.
எம்.ஆர்.டி கார்ப்பரேஷன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஸரிஃப் ஹஷிம், ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டத்தின் திட்டமிடலில், ஆரம்பத்திலிருந்தே ஒருங்கிணைப்பு என்பது ஒரு முக்கிய வழிகாட்டும் கொள்கையாக இருந்து வந்ததாகக் கூறினார்.
“ஆர்டிஎஸ் இணைப்பு ஒரு தனித்த சேவையாக ஒருபோதும் கருதப்படவில்லை. இது ஜோகூர் பாரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கான ஒரு பரந்த போக்குவரத்துக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
இந்தத் திட்டத்தின்கீழ், ஜோகூர் பாருவில் அமையவிருக்கும் தன்னாட்சி ரயில் போக்குவரத்து (ஏஆர்டி) அமைப்பில், புக்கிட் சாகரில் ஒரு நிறுத்தம் சேர்க்கப்பட்டு, அது ஆர்டிஎஸ் இணைப்புடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கும் என்றும், ஏஆர்டி நிலையத்திற்கான இடம் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்காக, புக்கிட் சாகரை ஒரு முழுமையான ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மேம்படுத்தும் பணியில், போக்குவரத்து அமைச்சு, ஜோகூர் மாநில அரசு, ஜோகூர் பொதுப் போக்குவரத்துக் கழகம், நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பு, ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு நிர்வாகத்துடன் எம்ஆர்டி கார்ப்பரேஷன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக முகமது ஸரிஃப் கூறினார்.
முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நகரில் பொதுப் பேருந்துச் சேவைகளை மேம்படுத்துவதற்காக, 2027ஆம் ஆண்டுக்குள் 250க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக முகமது ஸரிஃப் மேலும் கூறினார்.
மற்றொரு முக்கிய அம்சமாக, பாதசாரிகளுக்கான மேம்பாலம் ஒன்று, ஆர்டிஎஸ் நிலையத்திற்கும் கேடிஎம் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை போன்ற ரயில் சேவைகளுக்கும் இடையே நேரடி இணைப்புகளை வழங்கும். இது புக்கிட் சாகர் பகுதிக்கு அப்பால் பயணிகளின் போக்குவரத்தைப் பரவலாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

