மாஸ்கோ: மாஸ்கோமீது உக்ரேன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
இரண்டு கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், தற்காப்பு அமைச்சின் கட்டடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிதைவுகள் காணப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
இரண்டு ஆளில்லான வானூர்திகள் தடுத்துநிறுத்தப்பட்டு நொறுங்கியதாக அமைச்சு கூறியது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிவாக்கில் இரண்டு குடியிருப்பற்ற கட்டடங்கள் தாக்கப்பட்டதாகக் கூறிய மேயர் செர்கய் சோபியானின், மோசமான பாதிப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
வானூர்திகளைத் தடுத்துநிறுத்த முயன்றபோது கட்டடங்கள் சேதமுற்றதா, வேண்டுமென்றே கட்டடங்கள் குறிவைக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வானூர்திகள் எப்போது தடுத்துநிறுத்தப்பட்டன என்பது குறித்து தற்காப்பு அமைச்சும் மேயரும் தகவல் வெளியிடவில்லை.
உக்ரேனின் தென் துறைமுகமான ஓடெசாவில் ரஷ்யா கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, இச்சம்பவம் நடந்துள்ளது.

