மாஸ்கோ: ஈஸ்டர் விடுமுறையைக் கருத்தில்கொண்டு உக்ரேனுடனான போரில் 32 மணிநேரச் சண்டை நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார்.
நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மத்திய கிழக்குப் பூசலால் தடம்புரண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் விடுமுறைக் கால சண்டை நிறுத்த உடன்பாட்டை இவ்வாரம் எட்டியுள்ளதாக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார்.
அதிபர் புட்டின் அனுமதியுடன் ஈஸ்டர் விடுமுறைக் காலம் நெருங்கிவருவதால் சண்டை நிறுத்தம் சனிக்கிழமை (ஏப்ரல் 11) பிற்பகல் நான்கு மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நள்ளிரவு 12 மணிவரை நடப்பில் இருக்கும் என்று கிரம்ளின் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ரஷ்யாவின் தலைமை ராணுவ அதிகாரியான தளபதி வெலரி ஜெரசிமொவுக்கு இந்தக் காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்கும்படி தற்காப்பு அமைச்சர் அன்டிரே பெலுசொவ் கட்டளையிட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
கிழக்கத்திய ஈஸ்டர் விடுமுறைக் காலம் மேற்கத்திய ஈஸ்டர் விடுமுறைக் காலத்தைவிட மாறுபட்ட நாள்களில் சற்று தாமதமாகக் கொண்டாடப்படுகிறது.

