கியவ்: உக்ரேனின் ஆகப் பெரிய இரண்டு நகரங்கள் மீது ரஷ்யா சனிக்கிழமை (ஜனவரி 24) காலை தாக்குதல் நடத்தியது.
இதில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் கியவ்வில் இருவரும் உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் நகரில் 11 பேரும் காயமுற்றனர்.
கியவ் நகரில் காயமடைந்த இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நகரின் மேயர் விட்டாலி கிலிட்ஸ்க்கோ தெரிவித்தார்.
“கியவ் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது,” என்று அவர் டெலிகிராம் செயலியில் பதிவிட்டார்.
ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக அவர் கூறினார்.
கார்கிவ் நகரை ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்கியதாக அந்நகரின் மேயர் இஹோர் டெரேக்கோவ் தெரிவித்தார்.
போரில் வசிப்பிடம் இழந்தோர் தங்கி வந்த விடுதியும் மகப்பேறு மருத்துவமனையும் தாக்கப்பட்டதாக அவர் டெலிகிராம் செயலி மூலம் தெரிவித்தார்.

