மாஸ்கோ: உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கொஸ்தியந்தினிவ்கா (Kostiantynivka) நகரைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா நீண்ட நாள்களாகக் கைப்பற்ற நினைத்த ஒரு முக்கியமான பகுதியாக அந்நகரம் இருந்தது. உக்ரேனின் டொனெட்ஸ்க் வட்டாரத்தை நோக்கி முன்னேறுவதற்கு இது பெரிதும் உதவும்.
கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களுடைய படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் ராணுவம் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தின் நடவடிக்கையை ஒரு முக்கியமான உத்திபூர்வ சாதனை என்று புடின் பாராட்டியுள்ளார்.
நாட்டின் எண்ணெய் விநியோகக் கட்டமைப்பைக் குறிவைத்து உக்ரேன் தீவிரமாக நடத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ரஷ்யப் படைகள் தங்களது பாதுகாப்பு மண்டலங்களின் அளவை அதிகரிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.
கொஸ்தியந்தினிவ்காவைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது குறித்து குறித்து உக்ரேன் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் ஐந்தாண்டுக்கும் மேல் நடந்து வருகிறது.
இதற்கிடையே சனிக்கிழமை (ஜூலை 4) காலை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திகள் மூலம் உக்ரேன் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

