ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவையும் அவரின் தற்காப்பு அமைச்சரையும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) சந்திக்க, ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி செர்கெய் ஷொய்கு இந்தோனீசியா சென்றார்.
தலைநகர் ஜகார்த்தாவில் தற்காப்பு அமைச்சர் சஃப்ரி சம்சுதீனை செவ்வாய்க்கிழமை காலை திரு ஷொய்கு சந்தித்ததாக இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ரஷ்யாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சரும் அதன் பாதுகாப்பு மன்றச் செயலாளருமான திரு ஷொய்குவை அதிபர் மாளிகையில் பிற்பகல் திரு பிரபோவோ வரவேற்றதாக அதிபர் மாளிகைப் பேச்சாளர் கூறினார்.
பாதுகாப்பு, தற்காப்பு விவகாரங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் குறித்து இந்தோனீசியாவின் உயர்மட்டத் தலைமைத்துவத்துடன் திரு ஷொய்கு பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்ஐஏ திங்கட்கிழமை தெரிவித்தது.